பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலான் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார்.
அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5% வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன.
17.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வாக்களிப்பில் பங்கேற்றனர்.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் மேற்கொண்ட சில தீர்மானங்கள் பல்வேறு தரப்பினரையும், போட்டி சமூக ஊடக நிறுவனங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
கருத்துக் கணிப்பு முடிவினையடுத்து இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள இலோன் மஸ்க், ”பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரை நான் கண்டுபிடித்த பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேர்வர் குழுக்களுக்கு தலைமையாக செயற்படுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.