இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு இந்த வருடம் வருடாந்த போனஸ் வழங்கக்கூடாது என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
பாரிய நட்டத்தைச் சந்திக்கும் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என, தலைவர் ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை அண்மையில் கட்டண உயர்வை மேற்கொண்ட போதிலும் பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாக அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதம் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் இவ்வருடம் இலங்கை மின்சார சபைக்கு 150 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.