அத்தியாவசியமான 14 மருந்துகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவினால் வழங்கப்பட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையைப் பயன்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் வதந்திகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியக் கடன் உதவியின் கீழ் கிடைக்கப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்தும் அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து கிடைத்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் எஞ்சியுள்ள 35 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள கேள்விகளால் இலவச சுகாதாரத்துறை சவால்களை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனியார் வைத்தியசாலைகள் அதிக கட்டணத்தை அறவிடுவது குறித்தும் இங்கு கவலை வெளியிடப்பட்டது.