இலங்கை மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் நிதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி மேற்பார்வை மற்றும் கடன் மேலாண்மையை மேம்படுத்துதல், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறை இணைப்பு மற்றும் முறையான அபாயங்களைக் குறைத்தல், எரிசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் கார்பன் தடயத்தைக் குறைத்தல், SOE களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் விலக்குதல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பது ஆகியவை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் லைன் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் உலக வங்கிக் குழுவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர்.