பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஒன்றாக எழுவோம் ‘ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் நேற்று (16) மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாவலப்பிட்டியில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,
கோட்டாபய ராஜபக்ஷவுக்காக இந்நாட்டின் பொது மக்கள் திரண்டனர்.மேலும் சில வியத்மக உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்தனர்.
65 வருட அரசியலில் சாதிக்க முடியாததை நுகேகொடை மே தினத்தில் அனுரகுமார திஸாநாயக்க மிகத் தெளிவாகக் கூறினார்.
அரசியலமைப்பை தூக்கி எறிவோம், அவை ஆவணங்கள் மட்டுமே, இவ் விடயத்தை நடுப்பாதையில் வைத்து தீர்த்துக்கொள்வோம் என்று அன்றே வாக்குறுதியாக கூறினார்.அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது.
இன்றும் கோட்டாபய ராஜபக்ஷவை நான் ஒரு நபராக நேசிக்கிறேன். ஆனால் போராட்ட காலத்தில் அவரது செயற்பாட்டை நான் ஏற்கவில்லை. அவரால் அச்சவால் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்க முடியாதது தொடர்பில் இன்றும் வருந்துகிறேன்.
நான் அவ்விடத்தில் இருந்திருந்தால் அவரை விட வித்தியாசமாக செய்திருப்பேன். மஹிந்தானந்த அளுத்கம இருந்திருந்தால் அதற்கு மேலாக இருந்திருக்கும். மேலும் இச்சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகும். அரசாங்கங்கத்தை பலவந்தமாக கைப்பற்றுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றார்.