சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவைக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சபை உறுதிப்படுத்தும் வரை நிதி ஒப்பந்தங்களை முன்வைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட்டதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் காணப்படும் ஊழல், இலங்கையின் அபிவிருத்திக்கு சவாலாக உள்ளதாக IMF அமைப்பு கூறியுள்ளதாக சுமந்திரன் குறிபிட்டார்.
இந்த ஊழல்களை தடுப்பதற்கு அரசின் திட்டம் என்ன என வினவிய சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நிலை விவாதங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊழல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் நீதி அமைச்சர் புதிய ஊழல் சட்டத்தை முன்வைப்பார் என தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.