அதானி மற்றும் அமெரிக்காவின் நியூ போட்டரஸ் நிறுவனங்களின் முதலீடுகள் கிடைக்கப் பெறுவது இலங்கைக்கு அதிஷ்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு முதலீடுகள் இன்றி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. எனவே அவற்றைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
சிங்கப்பூர்இ மலேசியா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டு முதலீடுகளின் ஊடாகவே முன்னேற்றமடைந்துள்ளன.
ஆனால் இலங்கையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றின் ஊடாக வரவிருக்கும் முதலீடுகளுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றன.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை வெளிநாட்டு முதலீடுகளுடன் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
அதானி நிறுவனம் உலகின் செல்வந்த நிறுவனங்களில் ஒன்றாகும்.
அதே போன்று அமெரிக்காவின் நியூ போட்டரஸ் எனர்ஜி நிறுவனத்தில் இலங்கையின் பங்குதாரர்களும் உள்ளனர்.
இவர்களது முதலீடுகள் கிடைக்கப் பெறுவது எமக்கு அதிஷ்டமாகும்.
எனவே நாம் முதலீடுகளைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. வெளிநாட்டு முதலீடுகள் இன்றி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.