மக்கள் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கை மற்றொரு லெபனனாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புலமை வல்லுநர் சங்கங்களின் சம்மேளனத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
“இந்த வார இறுதியில் அவசரகால நிலை முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது. நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இருக்கும். இல்லையெனில், நாம் மற்றொரு லெபனானாக மாறுவோம்.
நான் நிதியமைச்சராக பதவியேற்றதும், அந்நிய செலாவணியில் இலங்கை குடியரசை விட நான் பணக்காரன் என்பதை உணர்ந்தேன். என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமித்து வைத்திருக்கிறேன். அதன்படி, நான் குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன்.
எனவே நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஊழியர்கள் ஒப்பந்தத்திற்கான இறுதி விதிமுறைகளில் இப்போது இரண்டு குழுக்கள் வேலை செய்கின்றன. கடன் தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ள மேற்கு மற்றும் சீனா, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் நிதி உதவி வழங்க தயாராக உள்ளன. இந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஜப்பானுடன் ஆலோசித்து வருகிறோம்.
நாம் விரைவாக செயல்பட்டால், இது குறுகிய கால வலியாக இருக்கும். ஆனால் வாதங்கள் தொடர்ந்தால், அனைவரும் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். பழைய முறையை கொண்டு வர மீண்டும் அதே பழைய அரசியலில் ஈடுபடுகிறோமா? அதுதானே பிரச்சினை?”என்றார்.