கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் ஒன்பது வயது சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்ற நபர் ஒருவர் பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (04) இரவு 8.00 மணியளவில் மேற்படி ரயிலில் சந்தேக நபர் குறித்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பயணிகள், சிறுவனிடம் விசாரித்த போது, சந்தேக நபர் அங்கிருந்து இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் நுகேகொட ரயில் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் பிடிக்கப்பட்டதுடன், மஹரகம ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பொலிஸாரிடம் சந்தேக நபரும் சிறுவனும் ஒப்படைக்கப்பட்டனர்.
கண்டியை சேர்ந்த குறித்த சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர் சுமார் இரண்டு நாட்களாக குறித்த சிறுவனுடன், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.