எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு, அது செயற்படுத்தப்படுகின்ற போதிலும், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அவசியமான ரூபா இதுவரையில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
எவ்வாறேனும் சேகரிக்கப்பட்ட டொலரைப் பெற்றுக்கொள்ள கனியவள கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை. இதுதான் அடுத்த பிரச்சினை.
அனைத்து எரிபொருளும் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அடுத்த எரிபொருள் கப்பலைப் பெற்றுக்கொள்வதற்காக ரூபா இல்லாவிட்டால், பாரிய அழுத்தம் ஏற்படும்.
விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், திறைசேரியிடம் ரூபா கோரப்படுகிறது.
மிகவும் தாமதமாக விலை அதிரிக்கப்பட்டமை மற்றும் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும்போது, அதற்கான பணம் கிடைக்காமையால் கனியவள கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகின்றது.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனம், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக, 217 பில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோருகிறது.
இந்த நிலையில், வழங்குவதற்கு பணம் இல்லை என மத்திய வங்கி தீர்மானித்தால், டொலர் இருந்தாலும் அதனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யும் வழி இல்லாத நிலை ஏற்படும்.
இதன்காரணமாக, தற்போதைய எரிபொருளற்ற நிலை மேலும் சில காலங்களுக்கு நீடிக்கும் நிலை ஏற்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.