பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அவர், 2023ஆம் ஆண்டு, நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பொருளாதார மீளமைப்புக்கான வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளாக இருந்தன.
எனினும் தற்போது வங்குரோத்து நாடாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் கடன் மீளமைப்பு, மற்றும் பொருளதார ஸ்திரத்தன்மை என்பவற்றை சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இதனையடுத்தே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் திட்டத்துக்கு செல்லமுடியும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டின் இறுதியில் பணம் அச்சிடல் நிறுத்தப்படுவதற்கான தயார் நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடு, 2018 இன் நிலைக்கு செல்வதற்கு 2026ஆம் வருடம் வரையில் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இந்த ஜூன் 3489 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டும், அத்துடன் 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை 28 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டியுள்ளதாக ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.