கல்பிட்டி பகுதியில் தேனீ கொட்டிய 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனீ கொட்டியதால் சிறுவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியாமல் போனதாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இன்மையால் வாகனம் ஒன்றை தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறுவனை சைக்கிளில் வைத்து பல மணி நேரம் போராடி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல அச்சிறுவனின் சகோதரன் முயற்சித்துள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றரை மணித்தியாலத்திற்கு முன்னர் அழைத்து வந்திருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் கிடைத்திருந்தால் இன்று என் மகன் உயிருடன் இருந்திருப்பார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.