இவ்வருடத்துக்கான பஸ் கட்டணம் ஜூலை முதலாம் திகதி முதல் திருத்தப்பட வேண்டும் எனவும், அதற்கைமைய ஆகக் குறைந்த கட்டணம் 3 ரூபாவினாலும் அதிலிருந்து 15 – 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் ஆகக்குறைந்த கட்டணம் 5 ரூபாவாலும், அதிலிருந்து 20 – 30 வீதத்தினாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
2002 இன் தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கை படி, ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன்படி 12 காரணிகளின் அடிப்படையில் ஜூலை முதலாம் திகதி புதிய பஸ் கட்டணங்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக டீசல் விலை அதிகரிப்பின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில், பணவீக்கம் அதிகரிப்பு, உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட 11 காரணிகளை கருத்திற்கொண்டு இம்முறை கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.