ஆண்டுக்கு ஆண்டு மதிப்பீட்டின்படி, இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 33.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, மே மாதம் 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 45.1 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏப்ரலில் 23.9 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், மே மாதம் 34.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 17.5 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், மே மாதம் 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் 52.5 சதவீதமாக பதிவாகியிருந்த போக்குவரத்துடன் தொடர்புடைய பணவீக்கம், மே மாதம் 76.7 சதவீமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.