தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு தடையாக உள்ள விதிமுறைகளை உடன் தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதி கைத்தொழில் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு அதிகாரிகளிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.