போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவைக்கு அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையொன்றில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பார்களாயின், மேலதிகமாக உள்ள ஆசிரியருக்கு மற்றுமொரு ஆசிரியரை ஈடு செய்யாது, அவரை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலையில் கடமைக்கு அமர்த்த முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தடையின்றி கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச தெரிவித்துள்ளது.