கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான வைத்தியர்கள் அரச பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் யோசனைப்படி அரச ஊழியர்கள் அவர்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு ஈடான தொகையொன்றையே மொத்தக் கொடுப்பனவுகளாக பெற முடியும்.
அதனை விட அதிகரித்த தொகையில் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டுப்பாடு காரணமாக தற்போதைக்கு அரச மருத்துவர்கள் மாதாந்தம் சுமார் 30,000 ரூபா வரையான கொடுப்பனவை இழக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான நிலையில் தொடர்ந்தும் அரசாங்கப் பணியில் ஈடுபடுவது தொடர்பில் வைத்தியர்களில் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் அரச வைத்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படக் கூடும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தங்கள் சங்கத்தின் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.