ஜூன் மாதத்திற்குள் நாட்டில் ஏற்படக் கூடிய உணவுத் தட்டுப்பாடு காரணமாக பல சிறார்கள் போசணை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்களும் குறைந்த எடையுடைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் அபாயம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
அரிசி உற்பத்திக்கு தேவையான உரத் தட்டுப்பாடு மற்றும் சந்தையில் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் யாலப் பருவத்தில் நெற்செய்கையை கைவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குளங்கள், அணைக்கட்டுகளில் நீர் நிரம்பியுள்ள போதிலும், 45 வீதமான நெற்செய்கையே அப்பருவத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இவ்வருடம் நாட்டில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
அதற்கமைய, இவ்வருடம் நுகர்வுக்காக சுமார் 800,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும், ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்ய நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.