தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.
கடந்த 16 ஆம் திகதி காலை தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று (29) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.