மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் தனது மாமியாரை அடித்து கொலை செய்து விட்டு ஒருவர் தப்பி சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனேரி – கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் கணவன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளதுடன், சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்தபோது, மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
மாமியாரின் தலை மீது பாரிய பொருளால் சந்தேக நபர் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளதுடன், 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.