வவுனியாவில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இதனையடுத்து அனேகமான குளங்களின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறிவருகின்றது.
இந்நிலையில் சீரற்றகாலநிலை காரணமாக சூடுவெந்தபுலவு பகுதியில் 2 குடும்பங்களைசேர்ந்த 6 பேரும், ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் 3 குடும்பங்களைசேர்ந்த 8 பேரும், பெரியபுளியங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் என 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வவுனியாவின் பெரியகுளமான பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் குளத்தின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.