மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிசார் இதனை தெரிவித்தனர்
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு சரக்கு ரயிலில் திரிபோஷா பக்கற்றுகள் அனுப்பிவைக்கப்பட்டன.
அவை மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ம் திகதி ரயில் பெட்டியை உடைத்து அங்கிருந்து 750 கிராம் கொண்ட 750 திரிபோஷா பக்கற்றுகள் திருடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 7ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பொலிசாரின் விசாரணையில் திருடப்பட்ட திரிபோஷா பக்கற்றுகளை இருவர் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலினையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் ஞாயிறு அன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கருவப்பங்கோணி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இருவரை அவர்களது வீடுகளில் வைத்து இவ்வாறு கைது செய்ததுடன், எஞ்சிய திரிபோஷா பக்கற்றுகளை மீட்டுள்ளனர்.