வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் பல நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவற்றுள் வடமாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களின் முன்னாயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் அன்றாட நடவடிக்கைகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.
வடமாகாண மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் புதிய ஆணையாளர்களின் ஆதரவைப் பெறும் நோக்குடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.