அரசின் இலக்குகளை அடைய, இதுவரை பொதுப்பணித்துறை செயல்பட்டு வந்த விதம் மாற வேண்டும் எனவும் கிராமப்புற வளர்ச்சிக்கு பொது நிர்வாக சேவையின் ஆதரவு அவசியம் எனவும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்க அதிகாரிகளின் அனுபவமானது பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படுவதற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அடைவதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதம் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவதே அரசாங்கத்தின் தலையாய கடமை எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச சேவையில் அரசியல் அதிகாரத்தின் தலையீடுகள் இல்லை எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பிராந்திய அபிவிருத்திக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட பங்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அரச சேவைகளை குறைக்காமல் அரச சேவைக்கான தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.