தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்த 52 வயதான நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (19) பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.