மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தலமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் கடந்த திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் ரயில் சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் போது பல ஹோட்டல்களில் மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுட்ன, வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிடப்பட்ட போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமல் இருந்தமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.