நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில நாட்களாக அவரது மனைவியான அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவசர பொலிசாருக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்தியும், அவர்கள் வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிசாரால் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
