மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உறவினரிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் உத்தரவிட்டார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ம் ஆண்டு அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித நபரிடம் அவரின் மனைவி வழி உறவினரான சந்தேக நபர், அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம் கிடைத்த நபரிடம், குறித்த உறவினரான சந்தேக நபர் சென்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டார்.
இதில் கைது கைது செய்யப்பட்ட 41 வயதுடைய சந்தேக நபரை நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.