இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நால்வருக்கு 5 வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏனைய 22 கடற்தொழிலாளர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் இ ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கடற்தொழிலாளர்களின் படகினை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 26 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அதன் போது அவர்களின் மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி இருந்தனர்.
கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் 26 கடற்தொழிலாளர்களையும் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது தவணையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
26 கடற்தொழிலாளர்களில் ஒருவர் மூன்று படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் என கண்டறியப்பட்ட நிலையில், அவரின் படகை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான், அந்த படகில் இருந்த 4 கடற்தொழிலாளர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனை விதித்தார்.
ஏனைய 22 கடற்தொழிலாளர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் நீடித்து உத்தரவிட்டார்.