21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், தனது சில முக்கிய கடமைகளில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும், தனிப்பட்ட தீர்மானமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ராஜபக்ஷ குடும்பத்திற்காக சேவை செய்கிறோம் என்பது ஒரு குற்றச்சாட்டு. அது மிகவும் உண்மையானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மிகவும் ராஜபக்ஷவாதி. அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள தற்போது முடிந்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தில் இப்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே எனக்கு தொடர்பு உள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் ஊடாக மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதற்காக தீவிர அரசியல் செய்து வருகிறேன் என்றார்.