நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தமது அதிகாரங்களை மீறிச்செயற்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் முறையிடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இந்த முறைப்பாட்டை இன்று சபையில் முன்வைத்தார்.
அதிகாரிகளை விசாரணை செய்யும்போதும், நடைமுறைகளை பின்பற்றும்போதும் அவர், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்று இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
இதன்போது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கடுமையான வாதவிவாதங்கள் இடம்பெற்றன.
இந்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்க ஹர்ஷ டி சில்வா முயன்றபோதும், சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.
தமது கருத்தை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் முன்வைக்குமாறு சபாநாயகர் அவரிடம் கூறினார்.
இதன்போது ஹர்ஷ டி சில்வாவுக்கு ஆதரவாக பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்க, சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.
கோப், மற்றும் கோப்பா குழுக்கள் இயங்காத நிலையில், அமைச்சர் கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டமைக்கு அமையவே தாம் செயற்பட்டதாகவும், இதற்கு முன்னதாக தாம், பொது நிதிக்குழுவின் தலைவருக்குரிய அதிகாரங்கள் குறித்து சபாநாயகரின் முழுமையான ஆலோசனையை பெற்றதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.