நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், பிரிந்து செயற்படுவதில் அர்த்தமில்லை என்றும், வரலாற்றில் எந்தக் காலத்திலும் பிரிந்துச் சென்று முன்னேறிய அரசியல் இருந்ததில்லை என்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு (25) பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இடதுசாரி சக்தியின் தலைமை ஒன்று உருவாகும் எனவும் அதன் தலைவராக தமக்கு விருப்பமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ ஆட்சி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தாம் எதுவும் கூறமுடியாது எனவும், மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, ராஜபக்ஷ ஆட்சிக்கு தேவையான ஆதரவு 69 இலட்சம் அல்ல 09 இலட்சம் கூட இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்