கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ, வேறு எந்தப் பதவியையும் வழங்கும் தொடர்பிலோ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மத வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.
மேலும், தாம் அரசியலில் நீடிப்பதா இல்லையா என்பதை கோட்டாபய இன்னும் தீர்மானிக்கவில்லை.
அதேநேரம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.