960 மணிநேரத்திற்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
மக்கள் பட்டினியால் வாடும் போது, நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. நாடாளுமன்றுக்கு சென்று எதையாவது செய்யுமாறு கூறியே என் அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.
6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் – பதவி துறந்து வருமாறு எனது மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல எதையும் நான் செய்யாவிட்டால் ‘தாத்தா கம் ஹோம்’ (அப்பா வீட்டுக்கு வாங்க) என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.
அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள் மட்டுமே. அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு பணியாற்றுவதற்காக கால அவகாசமாக வழங்கப்பட்டுள்ளது.
என்னைபோல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? என்றார்.
அத்துடன், தனது பணி இலக்குகளையும் பட்டியலிட்டு ஆவணமொன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கா வழிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வங்குரோந்தடைந்த நிறுவனங்களை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் உள்ள தனக்கு, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.